லாக்கப் - சாமான்யனின் குறிப்புகள்
பொதுவாக சில பேய் மற்றும் த்ரில்லர் திரைப்படங்களில் எச்சரிக்கை வாசகம் போடுவார்கள் 'இதயம் பலவீனமானவர்கள், இதய நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டாம்' என்று.
ஒரு வேளை அதை புத்தகங்களிலும் போடும் வழக்கம் இருந்திருந்தால் மு. சந்திரகுமார் இதில் நிச்சயம் போட்டிருப்பார். இதயம் பலவீனமானவர்கள், இதய நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் இந்த புத்தகத்தை/நாவலை படிக்க வேண்டாம் என்று. ஒரு வேளை இதுமாதிரி புத்தகங்கள் வெளிவருவது அரிதினும், அரிது என்பதால் அந்த வழக்கம் இல்லையென நினைக்கிறன். அவ்வாறு, எச்சரிக்க காரணம் ஆபாசமோ, பேய் மிரட்டலோ அல்ல ஒரு வித சகிக்க முடியாத
அருவெறுப்பு, சோகம், வலி, வேதனை, எல்லாவற்றையும் தாண்டி எந்த மனிதனும் வெறுக்க கூடிய விஷயங்கள்.
தமிழில் சென்ற வருடம் (2016ல்) வெளிவந்து தேசிய விருதுகளை அள்ளியது மட்டுமல்லாமல் இந்தியாவில் இருந்து ஆஸ்காருக்கு பரிந்துரைக்க பட்ட திரைப்படமான 'விசாரணை' மு. சந்திரகுமாரின் லாக்கப் நாவலை மையமாக
கொண்டு எடுக்கப்பட்டது. அந்த திரைப்படம் பார்த்தவர்கள் "லாக்கப்" நாவலை பற்றி அறிவார்கள், சந்திரகுமாரை பற்றி அறிவார்கள். இதுவரை இருந்த என் கருத்தை "எந்த ஒரு உணர்வையும், உணர்ச்சியையும், திரையில் தான், கண்களால் காண வைப்பது மூலம் தான் அதிகம் மக்கள் மனதில் பதிய வைக்க முடியும்" என்பதை சுக்கு நூறாக உடைத்தெறிந்து விட்டது லாக்கப் நாவல். திரையில் "விசாரணை" படம் பார்த்து உள்ளுக்குள் அனேக பேருக்கு குறிப்பாக சாமானிய மக்களுக்கு, அடித்தட்டு மக்களுக்கு ஒரு வித அச்ச உணர்வு உண்டாகி இருக்கும். ஒரு வேளை சந்திரகுமார் நேரடியாக உண்மையாக, பாதிக்கப்பட்டவர் என்பதால் என்னவோ திரையை விட அதிகம் எனக்கு அச்ச உணர்வும், அருவெறுப்பும், பரிதாபமும் தந்து விட்டார். இன்னொன்ரும், காரணமாக இருக்கலாம் நாவலில் சொன்ன நிறைய விஷயங்களை, சந்திரன் அனுபவித்த கொடுமைகளை, உண்மைகளை பெண்களும், குழந்தைகளும், குடும்பங்களும் கூடி பார்க்கும் சினிமாவில் காட்டுவது கடினம். காட்டவும் முடியாது. அது ஏன் என்று இதில் அறிவீர்கள்.
மனிதனின் அடிப்படை உரிமை எது? சாப்பாடு ?, இருப்பிடம் ?, வாழும் உரிமை?. எல்லாவற்றையும் தாண்டி ஒன்று உள்ளது இயற்கை உபாதைகளை கழிப்பது. அதை இயற்கையாலும் தடுத்து நிறுத்த முடியாது. அந்த உரிமை கூட மறுக்கபட்டால் அந்த உயிர் பூமியில் இனியும் வாழ முடியுமா? மறுக்கப்பட்டது சந்திரனுக்கும், சகாக்களுக்கும், பிற சிறைகைதிகளுக்கும். பத்துக்கு பத்து அகல அறையில் குறைந்தபட்சம் ஏழு பேர் அதிகபட்சம் இருபத்தியோரு பேர். சிறுநீர் கழிக்க வேண்டுமானால் கூட போலீசாரிடம் கேட்டால் திறந்து விடமாட்டார்கள், என்று அந்த சிறிய ஓட்டை வழியே கழித்தது, அந்த குடலை பிடுங்கும் நாற்றத்துடன் அங்கேயே தங்கியது, தவிர வியர்வை நாற்றம், குளிக்க முடியாத நாற்றம், அதையும் தாண்டி சிறைகைதி ஒருவன் நடுராத்திரியில் அடக்க முடியாமல் போன மல நாற்றம் என்ன எந்த மனிதனும் சகித்து கொள்ளவே முடியாத, சொல்லப்போனால் சகித்து கொள்ளவே கூடாதவற்றை சகித்து கொண்டு, அங்கேயே ஒரு வேளை சோறுண்டு வாழ்ந்திருகிறார்கள் என்பதை விட செத்திருகிறார்கள் என்று சொல்லலாம்.
ஒரு வேளை இது மாதிரியான தண்டனைகள் தவறு செய்தவன் அனுபவித்தால் அதை ஒருக்கால் ஏற்றுகொள்வோம். ஆனால், எந்த தவறும் அறியாதவர்கள், அந்த தவறே செய்யாதவர்கள் விசாரணை என்ற பெயரில் இந்த ரணங்களை அனுபவித்தால் ?? ஆம், நமக்கு பரிச்சயபட்ட கைதிகள் யார் என்று பார்த்தால். தூக்குதண்டனை கைதி, ஆயுள் தண்டனை கைதி, கடைசியாக தான் "விசாரணை கைதி", அதாவது வெறும் வெற்று சந்தேகத்தின் பேரில் விசாரிக்க காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டு, பல நேரங்களில், பல வழிகளில் எந்த சம்மந்தமும் இல்லாமல் துன்பப்பட்டு, துன்பத்திற்கு ஆளாகப்படுபவர்கள். அந்த, விசாரணை கைதிகளின் அடிப்படை உரிமைகள் தான் அதிகம் பறிக்கப்படும். குற்றம் செய்த உண்மையான கைதிகளுக்கு கூட மூன்று வேளை சோறு, மருத்துவ உதவி, துப்பாக்கி ஏந்திய போலிஸ்களுடன் உயிர் பாதுகாப்பு நிச்சயம் (அது தப்பியதை கடந்த நாட்களில் நாம் பார்த்திருக்கலாம், ஆனால், ஒரு வகையில் அதுவும் விசாரணை கைதி என்ற வகைக்குள்ளே அடங்கும் என பலர் அறிவர்). உடல் சிதைக்கபடும், உள்ளம் வதைக்கப்படும், மனிதனை காக்க தான், இன்னொரு மனிதன், நீதி, கோர்ட் என்று எது இருந்தாலும் அது மாற்றப்படும்.
என்னால் புத்தகத்தின் அறுபது, அறுபத்தி இரண்டாவது பக்கங்கள் வரையிலும், நூற்றிஇருபது,நூற்றிஇருபத்தி இரண்டு பக்கத்தையும் மறக்கவே முடியாது. என்னவோ நானே அங்கே நின்று "சம்மட்டி" அடியும், இரவு முழுக்க கோழைத்தனமான வன்முறையால் என் உடல் சிதைக்கப்படுவதும் போல உணர்ந்தேன். அவ்வுளவு வலி, வேதனை, ரத்தம் மட்டும் இல்லை. "உள்ளங்கால் எலும்பு சதையின்றி மண்ணில் குத்துவது போல" என்று அவர் சொல்லும் பொழுதெல்லாம் என் உள்ளங்கால் சில்லிட்டது. மனம் கணத்தது.
இருண்ட அறைக்குள் எத்தனை குமுறல்கள், வலிகள், வேதனைகள். அதிகாரம் என்றுமே அது இருப்பவனிடமும், பணம் இருப்பவனிடமும் வேளை செய்வதே இல்லை. அது சாமானியனின் கைகளை தான் கட்டி போடுகிறது. பயம் காட்டுகிறது. மனித உரிமைகள் மீது அக்கறை கொண்டவர்கள் படிக்க வேண்டிய புத்தகம் "லாக்கப்". "விசாரணை" படம் பார்த்திருந்தாலும் எந்த இடத்திலும் நிற்காத வேகமான ஓட்டம். அந்த உணர்வே இருக்காது, பல நேரங்களில் மனம் உணர்ச்சியற்று போகும்.
அடி, உதை, சத்தம், "**தா", "**மாலே" என ஆபாசம் தெறிக்கும் வார்த்தைகள், பொய், வலி அந்த சூழ்நிலையிலும் அவர்கள் அனுபவிக்கும் அற்ப சந்தோஷங்கள் இதுவெல்லாம் "லாக்கப்"பில் ஏராளம், தாராளம்.